முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார். இவருக்கு வயது 95. நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரது தாயாரை பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார். சென்னையிலிருந்து தேனிக்கு புறப்பட்டு அவரசமாக பெரியகுளம் வருகிறார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி கூறியுள்ளார். “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.
ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.