பெண்கள் டி20 உலகக்கோப்பை: 6வது முறையாக பட்டம் வெல்லுமா ஆஸ்திரேலியா…தென் ஆப்பிரிக்காவுடன் நாளை மோதல்..!

கேப்டவுன்,

8-வது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கேப்டவுனில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், நாளை நடக்கும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள தென் ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

அதே வேளையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவலாக உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்க உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.