தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார் மற்றும் கணவன்-மனைவி படுகாயமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் கன்சால்பைல் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குமரவேல் (45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை குமரவேல் பாலக்கோடு சென்று விட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது காட்டு மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, அவ்வழியாக எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவர் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்ட குமரவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முனுசாமிகொட்டை பகுதியை சேர்ந்த சிவம்(20) மற்றும் அவரது மனைவி சத்யா(19) ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த குமரவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.