திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா: பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்து நேர்ச்சை செலுத்தினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகும். ஆன்மிக சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும். தற்போது மாசித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்ச்சை செலுத்தினர். பின்னர் அவர்கள், கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.