நடுரோட்டில் தோழியை அறைந்த இளைஞனை மன்னிப்பு கேட்க வைத்த நாக சவுர்யா

சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் விஜய் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இயக்கிய 'தியா' படத்தில் சாய் பல்லவியின் ஜோடியாக நடித்தவர் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. தற்போது அவர் பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சாலை ஒன்றில் இளைஞர் ஒருவரது கையை வலுக்கட்டாயமாக பிடித்து அவருடன் கூடவே நின்றிருந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்வு குறித்து அங்கே அருகில் இருந்தவர்கள் கூறும்போது, ஒரு இளைஞன் தன்னுடைய கேர்ள் பிரண்டை தெருவென்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து உள்ளார். அதை தனது காரில் வந்தபோது ஏதேச்சையாக பார்த்த நாக சவுர்யா உடனே காரை விட்டு இறங்கி அந்த இளைஞனை தனது செயலுக்காக அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தியுள்ளார். அந்த இளைஞன் அந்த பெண் தனது கேர்ள் பிரண்ட் என்று கூற, யாராக இருந்தால் என்ன நடுரோட்டில் ஒரு பெண்ணை அடிக்கும் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது அவளிடம் மன்னிப்பு கேள் என்று தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

இதற்கிடையே அந்த இளம்பெண் பிரச்சனை வேண்டாம் என நினைத்து அந்த இளைஞனை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர முயற்சிக்கிறார். இதனை தொடர்ந்து அங்கே கூட்டம் கூடி விட, ஒரு வழியாக இந்த இளைஞர் அந்த பெண்ணிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டார். கூடியிருந்தவர்கள் நாக சவுர்யாவின் இந்த செயலை பாராட்டினர்.

அதேசமயம் தற்போது தான் நடித்து வெளியாக இருக்கும் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக செய்யப்பட்ட ஒரு செட்டப் தான் என்றும் கூறி நாக சவுர்யாவை நெட்டிசன்கள் சிலர் கிண்டலடித்தும் வருகிறார்கள். எது உண்மை என்பது அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கே வெளிச்சம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.