ரஷ்யா உக்ரைன் போர் ஒருவருடத்தையும் கடந்து தொடர்கிறது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு வகையில் முயற்சி செய்தன. ஆனால்,போரை நிறுத்துவதாக தெரியவில்லை. அதைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பிப்ரவரி 2022 -லிருந்து, 11,300 க்கும் மேற்பட்ட பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன.
மேலும் ரஷ்யாவின் வெளிநாட்டு இருப்புகளில் சுமார் 300 பில்லியன் டாலர் முடக்கியுள்ளது. இருப்பினும், பொருளாதாரத் தடைகளின் விளைவாக இழந்த வருவாயை மீட்பதற்கு பல்வேறு வகைகளில் ரஷ்யா முயன்றுவருகிறது. கடந்த ஆண்டு உக்ரைன் படையெடுப்பிற்கு முன்னர் ரஷ்யாவின் வர்த்தகத்தில் முக்கியப்பங்காற்றிய ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம், 51 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டின் வருமானத்தை விட ஜனவரியில் ரஷ்ய அரசின் வருவாய் 35 சதவிகிதம் குறைந்தும், அதே நேரத்தில் செலவினங்கள் 59 சதவிகிதம் உயர்ந்திருக்கின்றன. இந்த நிலையில் தான், சைபீரியாவில் கடந்த வியாழக்கிழமை பொருளாதார மாநாடு நடந்தது. அதில் கலந்துக்கொண்ட ரஷ்யா “அடுத்த ஆண்டு பணம் இருக்காது, எங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவை,” என்று ரஷ்ய குழு தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது