சென்னை கே.கே நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வடபழனியில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திவந்தார். இவருக்குத் திருமணமாகி ராதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளுக்கும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சுரேஷ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவர் செல்லும் பல இடங்களிலும் சுரேஷின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் வரை தேடியிருக்கிறார்கள். இருந்தபோதிலும் சுரேஷ் குறித்து எந்த தகவலும் இல்லை.

சுரேஷ் தனது செல்போனை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றிருந்தார். அந்த செல்போனை ராதா எடுத்துப் பார்த்தபோது அதில், “ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன். நான் வாழத் தகுதியற்றவன், தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என்று கடிதம் எழுதி அதைப் புகைப்படம் எடுத்து வைத்திருந்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராதா இந்தச் சம்பவம் குறித்து கே.கே நகர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவரைக் கண்டுபிடித்துத் தரும்படி புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மாயமான சுரேஷ் மெரினா கடற்கரைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று வருடங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடிவரும் சுரேஷ், 16 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்திருக்கிறார். அதோடு, தன்னுடைய நண்பர்களிடம் கடன் வாங்கியும் தொடர்ந்து விளையாடி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இதனால் சுரேஷ் கடந்த சில தினங்களாக கடும் மனஉளைச்சலில் இருந்தது வந்திருக்கிறார் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
நேற்று தாம்பரத்தில் ஆன்லைன் ரம்மியில் 20 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.