கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கவும் உத்தரவு.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம், சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஞாயிறு அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமதி (45), பிருந்தாதேவி (35), லட்சுமி (24), செவ்வந்தி (19) மற்றும் அம்பிகா (18) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.