குப்பை கிடங்கில் தீ விபத்து

பல்லாவரம்: குன்றத்தூரில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் வழுதலம்பேடு என்னும் இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன், அருகிலேயே அப்பகுதியில் சேகரமாகும் குப்பை அதிகளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை இந்த குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென்று பரவியது. இதனால், அதிச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், தீ மற்ற இடங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் இரவு நேரத்தில் இங்கு மது அருந்தியவர் யாரேனும் புகை பிடித்துவிட்டு போட்டதால் தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் சதிச் செயலா என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.