சென்னை: சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க செயல்படுத்திய 5 பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பேச்சு விளக்கம் அளித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சார்பில், நகர்ப்புற வெள்ள பாதிப்பு தடுப்பு குறித்த பயிலரங்கம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களின் ஆணையர்கள், ஐ.ஐ.டி நிபுணர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஒவ்வொரு பெருநகரங்களிலும், வெள்ள பாதிப்பு தடுப்பது குறித்து, அந்தந்த நிர்வாகங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: சென்னையில் வருங்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஐந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்த மழைநீர் வடிகால்கள், ஒரு மணி நேரத்திற்கு 4 செ.மீ. அளவிற்கு மழைநீர் செல்லும் வகையில் இருந்தது. தற்போது, ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 7 செ.மீ., வரை மழைநீர் செல்லும் வகையில் வடிகால்கள் அமைக்கப்படுகிறது.
- விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது.
- முந்தைய ஆண்டுகளில், பருவமழைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, மழைநீர் வடிகால்கள் துார்வாரும் பணி நடைபெறும். கடந்த ஆண்டு ஐந்து மாதத்திற்கு முன்னதாகவே பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க அமைக்கப்பட்ட திருப்புகழ் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- அதேபோல், மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில், மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டங்கள் வாயிலாக, வரும் காலங்களில் மழை வெள்ள பாதிப்பு குறைக்கப்படும்” என்று அவர் பேசினார்.