அரசு மாதிரி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பில் சேர அறிவிக்கப்பட்டுள்ள நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு ஆசிரியர் நல கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல நிறுவனத் தலைவர் சா.அருணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசின் மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சேர்வதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது உண்மையாகவே வருந்தத்தக்கது.
மருத்துவ படிப்பிற்கே நீட் வேண்டாம் என்று நாம் போராடும்போது, அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று.
மாதிரி பள்ளி என்ற பெயரில் மற்ற அரசு பள்ளிகளை நாமே தரம் பிரித்து பார்ப்பதாக உள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தாமல் குலுக்கல் முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், இப்படி நுழைவு தேர்வு நடத்துவது நியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.