சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நீக்கம் செய்த பெண் ஊழியருக்கு மீண்டும் பணி வழங்காத விவகாரத்தில் சேலம் தொழிலாளர் நீதிமன்றம் பதிவாளரை கைது செய்ய உத்தரவுவிட்டுள்ளது.
சேலம், ரெட்டிப்பட்டி நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் தெய்வராணி (53). இவர் கடந்த 1998-ம் ஆண்டு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தேர்வு கட்டுப்பாட்டு பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2002ம் ஆண்டு தினக்கூலி என கூறி அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பாக தெய்வராணி, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை பணியில் சேர்த்து நிரந்தரமாக்க வேண்டும் என கூறியிருந்தார்.
வழக்கு விசாரணையில், கடந்த 2013ம் ஆண்டு தெய்வராணியை பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும், சம்பளம் வழங்க வேண்டும் என தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், பெரியார் பல்லைக்கழகம் தெய்வராணியை வேலைக்கு சேர்த்து கொண்டு, சம்பளம் வழங்கவில்லை. இதையடுத்து, தெய்வராணி மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சேலம் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய வேண்டும் எனவும், வழக்கு விசாரணை வரும் ஏப்., 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.