மதுரை மாவட்டத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை கத்தியால் குத்தி நண்பர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கே.உன்னிபட்டி பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் சரவணன்(40). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சரவணன் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வருவதற்காக பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். அப்பொழுது சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த நண்பரான பெரியசாமியுடன் (44) பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பெரியசாமி, தான் வைத்திருந்த கத்தியால் சரவணனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சரவணனின் மனைவி ராஜலக்ஷ்மி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சரவணனை கத்தியால் குத்திக்கொன்ற பெரியசாமியை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.