உதகை: உதகமண்டலம் அருகே அதிகமாக சத்து மாத்திரை உட்கொண்ட 6 மாணவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. உதகை அருகே உள்ள காந்தல் பென்னட் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலை பள்ளியில் 196 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு தலா 30 ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கபட்டன.
வாரம் ஒரு மாத்திரை வீதம் சாப்பிடுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 7ம் வகுப்பு மாணவர்கள் சிலர் விளையாட்டு தனமாக 5 மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு 6 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து உடனடியாக அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.