குஜராத்தில் ரூ.425 கோடி ஹெராயின் பறிமுதல்

கட்ச்: ஈரானிய  படகில் கடத்த முயன்ற ரூ. 425 கோடி மதிப்பிலான ஹெராயினை இந்திய கடலோர  காவல்படை அதிகாரிகள் குஜராத்தில் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். குஜராத்  மாநில தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,  இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து இரண்டு ரோந்து கப்பல்கள் அரபிக்கடலில்  கண்காணிப்பு பணியை மேற்கொண்டன.

கட்ச் மாவட்டம் ஓகா கடற்கரையில் இருந்து  சுமார் 340 கிமீ தொலைவில் உள்ள இந்திய கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான  வகையில் சென்ற படகு ஒன்றை  மடக்கி பிடித்து சோதனை நடத்தியதில்,  அந்த படகு ஈரானில் இருந்து வந்தது என்பது தெரிந்தது. அந்தப் படகில் சுமார்  61 கிலோ எடையுள்ள ரூ.425 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் இருப்பதை  பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து அந்த படகில் இருந்த 5  ஈரானிய நபர்களை கைது செய்தது. மேலும் அந்தப் படகையும் போதை பொருளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.