டாக்கா: வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள 7 மாடிக் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பழைய டாக்கா நகரில் உள்ள குலிஸ்தான் பகுதியில் 7 மாடிக் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தில் வங்கி அலுவலகம், கடைகள், அலுவலகங்கள் இயங்கிவந்தன. மேலும் தரைத்தளத்தில் வேதியியல் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4.50 மணிக்கு கட்டிடப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஏதோ குண்டுவெடித்தது என்று மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்தனர். அங்கிருந்த இடிபாடுகளை அவர்கள் அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெடிவிபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும், அந்தக் கட்டிடத்தின் தரைப்பகுதியில் சட்டவிரோதமாக வேதியியல் பொருட்களை சேகரித்து வைத்து இருந்தார்கள் என்றும், அதுவே வெடிவிபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த வெடிவிபத்தால் கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் கட்டிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தும் சேதமடைந்தது.
தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.