பழநி: பழநி வனப்பகுதியில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 50 அரியவகை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. பழநி அருகே பாலாறு அணை, கலிக்கநாயக்கன்பட்டி குளம், கோதைமங்கலம் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வன பணியாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவவனம் மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலம் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. 2 கட்டங்களாக கணக்கெடுப்பு பணி நடந்தது. முதற்கட்ட கணக்கெடுப்பில் 30 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. 2வது கட்டமாக தேக்கந்தோட்டம், சவரிக்காடு, புளியம்பட்டி வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இதில் அரிய வகை பறவைகளான இந்தியன் பாராடைஸ் பிளைகேட்சர், பிரவுன் ஹெட் பார்பெட் உட்பட 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறிப்பட்டு பதிவு செய்யப்பட்டன. பல பறவை இனங்கள் கூடுகள் கட்டி இனப்பெருக்கம் செய்வதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து பழநி வனச்சரகர் பழனிகுமார் கூறுகையில், ‘பழநி பகுதியில் நிலவும் நல்ல தட்பவெட்பம் காரணமாக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. பறவைகளை வேட்டையாடுவது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி சிறை தண்டறை வழங்கப்படும்’ என்றார்.