சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், `Gross Cost Contract’ முறையில் முதற்கட்டமாக 500 தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்தி வெளியானது.

இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்து வசதி குறைவாக இருக்கும் இடங்களில்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசிக்கப்படுவதாக விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இத்தகைய முடிவு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில், வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், “சென்னை மாநகருக்குள் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது…” எனக் கேள்வி கொடுக்கப்பட்டு, “சரி, தவறு, கருத்து இல்லை” என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 54 சதவிகிதம் பேர் தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது `சரி’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 42 சதவிகிதம் பேர் `தவறு’ என்றும், 4 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை’ என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அரசுக்கே திருப்பியனுப்பியிருப்பது தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடந்துவருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கை க்ளிக் செய்யவும்.