தர்மபுரி: தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் ஆர்.பாக்கியராஜ், சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் (சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு) பதவியிலிருந்தும், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கின்றேன். தம்பி அண்ணாமலைக்கு, சகோதரர் சிடிஆர் நிர்மல்குமாரின் வளர்ச்சி, பாஜகவிலும் சமூக ஊடகங்களிலும் தன்னைவிட அபரிமிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால், அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார்.

ஏன் என்றால், தன் இடத்திற்கு வந்துவிடுவார் என்ற அச்சம். தம்பி அண்ணாமலை, கடந்த மாதம் (பிப்ரவரி) டெல்லி செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு ஐடி விங் மற்றும் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டதினால், தங்களுக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம், பண்பு, அன்பு, பாசம், தெளிவு மற்றும் அரசியலுக்கான சகிப்புத்தன்மை உள்ள சிடிஆர் நிர்மல்குமாரின் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி” என்று அதில் கூறப்பட்டுள்ளது.