நீலகிரியில் சத்து மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6ம் தேதி 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 4 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஜெய்பா பாத்திமா என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நாசஜியா, ஆயிஷா, சர்புதீன் மற்றும் குல்தூண் நிஷா ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கும் அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு ரூ.1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.