மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற கோரி தெலங்கானா முதல்வர் மகள் டெல்லியில் உண்ணாவிரதம்

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற கோரி தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லியில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யக்கோரி பிஆர்எஸ் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட்,திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக,டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக உள்ள நிலையில் நேற்று அவர் இந்த போராட்டத்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், இந்த போராட்டத்துக்கு 18 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உண்மையில் பாஜ அரசுக்கு பெண்கள் மீதான அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தில் பெண்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பாஜவுக்கு மெஜாரிட்டி இருந்தும் இதை நிறைவேற்றாமல் உள்ளனர். இம் மசோதா நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.