ஆனைமலை அருகே உள்ள ஆழியாரில் விரிந்து பரந்து கடல் போல் கிடக்கும் ஆழியார் அணையை பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த அணையின் நடுப்பகுதியில் 1941 ஆம் ஆண்டு லேம் என்னும் ஆங்கிலேய இன்ஜினியர் கட்டிய கல் பாலம் இன்னும் அழியாமல் உள்ளது. கோடை காலங்களில் அணையின் நீர்மட்டம் குறையும் போது கல்பாலம் மற்றும் அதன் வழியாக வால்பாறைக்கு செல்லும் கருங்கல் சாலையும் தெரிவது உண்டு.1957 ஆம் ஆண்டு ஆழியார் அணை கட்டத் தொடங்கியபோது,ஏற்கனவே அணையின் நடுப்பகுதி வழியாக வால்பாறைக்கு சாலைசென்று கொண்டிருந்தது. மேலும் அணை கட்டுவதற்கு முன்பாக அங்கு சிங்கார தோப்பு என்ற கிராமமும் இருந்தது.
இங்கு இரவாளர்கள் என அழைக்கப்படும் மலைவாழ் மக்கள் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வந்தனர். மேலும் அவர்கள் அங்கு விவசாயம் செய்து வந்தனர். அணை கட்டப்படும் போது தற்போது வால்பாறைக்கு செல்லும் சாலை அமைக்கப்பட்டது. பின்பு 1962 ஆம் ஆண்டு அணை பயன்பாட்டுக்கு வந்த போது ஆங்கிலேயர் அணையின் நடுப்பகுதியில் கட்டிய கல்பாலம் மற்றும் சாலை பயனற்று தண்ணீரில் மூழ்கியது.
ஆனாலும் ஆங்கிலேயன் கட்டுமான பணிக்கு எடுத்துக்காட்டாக இன்றும் அந்த கல்பாலம் லேசாக பழுதடைந்த நிலையில் அணையின் நடுப்பகுதியில் உள்ளது . கோடை காலங்களில் அணையில் தண்ணீர் நீர்மட்டம் குறையும்போது இந்த கல்பாலம் மற்றும் கல் சாலை வெளியே தெரிவது உண்டு. அப்போது இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் தற்போது உள்ள வால்பாறை ரோட்டில் இருந்து அதை கண்டு வியந்து செல்கின்றனர்.