ஐபிஎல்-க்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது சவாலானது – ராகுல் டிராவிட்

மும்பை,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை (2-1) இந்திய அணி வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் ஜீன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 தொடர் வரும் 31ம் தேதி மே மாதம் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் வெறும் 9 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் இந்த 9 நாளில் இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களை தயார் படுத்த வேண்டும்.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது சிறப்பானதாகும். ஆனால், அது மிகவும் சவாலானது. இந்திய அணி அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி வருகிறது. அதே நேரத்தில் இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கு காரணம் அணியின் சிறப்பான செயல்பாடுதான்.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இடையே சில நாட்கள் தான் உள்ளன. அதனால் அது நிச்சயம் எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். அது அவ்வளவு எளிதாக இருக்காது. இருந்தாலும் இந்த சவாலை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்.

வீரர்கள் உலக டெஸ்ட் இறுதிக்கு தயாராகும் வகையில் பயிற்சியாளர்கள் தரப்பில் கலந்து பேசி திட்டங்கள் வகுக்கப்படும். அதன் மூலம் இந்த போட்டிக்கு தயாராக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். நிச்சயம் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.