நாம் தமிழர் பேரணிக்கு அனுமதி மறுப்பு: சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு!

அதிகரிக்கும் வட மாநில தொழிலாளர்களை முறைப்படுத்த கோரி

கட்சியின் சார்பாக பேரணி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது, நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில் “தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் வருகையை முறைப்படுத்தி அவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி கண்காணிக்க வேண்டும். கோவை வழக்கில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தொடங்கி காயல்பட்டினம் வரை நடைபயணம் மேற்கொள்ளவும் தொடர்ந்து மாலையில் அங்கு பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்க கோரி மனு அளித்திருந்தோம்.

ஜனவரி மாதம் இந்த நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் அந்த நிகழ்வை 18/3/2023 அன்று நடத்த திட்டமிட்டு அனுமதி வழங்க கோரி காவல் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே உடன்குடி முதல் காயல்பட்டினம் வரை நடைபயணம் மேற்கொள்ளவும், பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தற்போது உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை, வட மாநில பிரச்சனைகள் உள்ளதால் இந்த கூட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி வட மாநில தொழிலாளர் பிரச்சினையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தமிழ் நாடு அரசின் வரன்முறைக்குள் வராது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.