நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி – இரு அவைகளும் மதியம்  2 மணி வரை ஒத்திவைப்பு 

புதுடெல்லி: எதிர்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கூட்ட கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அது முதல் எதிர்கட்சிகள், ஆளுங்கட்சிக்கு இடையே அதானி விவகாரம், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பான அமளியால் தொடர்ந்து மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டம் எதிர்கட்சிகளின் கோஷங்களுடன் தொடங்கியது. அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, ”நான் பிரச்சினைகள் குறித்து பேச உங்களுக்கு அனுமதி வழங்குவேன். இப்போது நீங்கள் உங்கள் இருக்கைகளுக்குச் சென்று சபையின் மாண்பை பேணுங்கள்” என்று உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பதாகைகளுடன் நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். அவையின் நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று எதிர்கட்சி உறுப்பினர்களிடம் சபாநாயகர் வலியுறுத்தினார். எனினும், அவர்கள் கோஷமெழுப்புவது தொடர்ந்ததால், மதியம் இரண்டு மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களையில், ராகுல்காந்தி தனது லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆளுங்கட்சியினரின் முழக்கங்களுக்கு மத்தியில் மாநிலங்களவையின் நடவடிக்கைகள் இன்று தொடங்கின. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவையை மதியம் 2 மணிவரை ஒத்திவைத்தார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர், கிரண் ரிஜிஜு மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல், நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவரது லண்டன் பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜகவும் வலியுறுத்தி வருகின்றன. இவர்களின் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.