பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்: பாலை சாலையில் கொட்டி எதிர்ப்பு..!!

ஈரோடு: பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பசும்பாலுக்கான கொள்முதல் விலையை 35 ரூபாயில் இருந்து 42 ரூபாயாகவும், எருமை பால் கொள்முதல் விலையை 44 ரூபாயில் இருந்து 51 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து தமிழ்நாடு பால் நல உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று முதல் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு அடுத்த நசியனூர் மேட்டுக்கடை சாலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி தங்களது எதிர்ப்பை காட்டினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதிபட கூறியுள்ளனர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் பண்ணையில் இருந்து எந்தவித இடையூறுமின்றி பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகள் சீராக விநியோகிக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.