OSCAR: இப்படி படங்களை அனுப்பினால் எப்படி ஆஸ்கர் கிடைக்கும்? ஏஆர் ரகுமான்

அண்மையில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் விருதை வென்றது. இசையமைப்பாளர் கீராவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸூக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. இந்தியாவையே பெருமைப்படுத்திய இந்த விருதுக்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள் குவிந்தது. 

ஆஸ்கர் சர்ச்சை
 
அதேநேரத்தில் ஆஸ்கர் குறித்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு கிடைத்த விருது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆஸ்கர் விருது தேர்வுக்குழு படம் பார்க்கவே பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருப்பதால், அந்த விருது எப்படி உயர்வானதாக இருக்க முடியும்? பணம் இருப்பவர்கள் மட்டுமே விருது வாங்கக்கூடிய சூழல் இருப்பதால், அவர்கள் எப்படி நல்ல கலை அம்சம் கொண்ட படத்தை தேர்வு செய்வார்கள்? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.  

ஆர்ஆர்ஆர் மோசடி

மேலும், ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டதிலேயே மோசடி நடைபெற்றிருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத்தி படமான செல்லோ ஷோ தான் உண்மையாக ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் 80 கோடிக்கும் மேல் இயக்குநர் ராஜமௌலி செலவழித்து ஆர்ஆர்ஆர் படத்தை ஆஸ்கருக்கு எடுத்துச் சென்றதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.  

ஏஆர் ரகுமான் கருத்து

இது ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கும்போது ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான், இது குறித்து தெரிவித்திருக்கும் கருத்து சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஆஸ்கர் விருது குறித்து அவர் பேசும்போது, இந்தியாவில் இருந்து தகுதியான படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படுவதில்லை என தெரிவித்துள்ளார். தகுதியான படங்களை அனுப்பினால் மட்டுமே விருதை எதிர்பார்க்கலாம். அப்படி இல்லாதபோது விருதை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?. இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யும் படங்கள் கொண்ட குழுவினரிடம் வெளிப்படைத் தன்மை தேவை. இதுவரை அப்படியான வெளிப்படைத் தன்மை இல்லை. மூன்றாவது நபர்கள் வழியாகவே இதனை அறிந்து கொள்ள முடிவதாகவும் ஏஆர் ரகுமான் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.