காக்க முட்டை பட பாணியில் செல்போனை பறித்த சிறுவன்.. படியில் அமர்ந்த பயணிக்கு கை, கால் துண்டான கொடூரம்!!

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம் (40). இவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த நிலையில், கடைக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்குவதற்காக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், வந்த வேலை முடிந்து தனது நண்பருடன் ரயிலில் வாணியம்பாடி திரும்பிய அப்துல் கரீம், ரயில் படிக்கட்டில் செல்போன் பேசியவாறு பயணித்ததாக தெரிகிறது.

ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே வந்தபோது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த 15 வயது சிறுவன், அப்துல் கரீமிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அப்துல் கரீம், ரயிலில் சிக்கி இடது கை மற்றும் வலது கால் துண்டானது. படுகாயமடைந்த அவரை ரயில்வே போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.

பீர் குடிப்பதற்கு பணம் இல்லாததால், பேசின் பிரிட்ஜ் பகுதியில், ரயில் மெதுவாக செல்லும்போது, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த போனை, பாரிமுனையில் உள்ள ஒருவரிடம் 1,700 ரூபாய்க்கு விற்றதும் தெரிய வந்துள்ளது.

பேசின் பிரிட்ஜ் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடப்பதும் இதனால், பயணிகளின் விலை மதிக்க உயிர்கள் பறிபோகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவதாக குற்றம் சாட்டும் பயணிகள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.