மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பண்டாரவளை, பூனாகல, கம்பரகலை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (19) மாலை கம்பரகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கு வசிக்கும் 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மண்சரிவு தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான விரிவான அறிக்கையை தமக்கு வழங்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய வேறு இடங்கள் இருப்பின், அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு விரைவில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.