மாமல்லபுரம் : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கடலில் குதித்து தற்கொலை.!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்டு ஜாக்ஜங்கோஸ் என்பவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்து  இங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்கி சொந்த நாட்டுக்கு செல்லாமல் மாமல்லபுரத்திலேயே தங்கியுள்ளார். 

பின்னர் மாமல்லபுரம் ஊர், இங்குள்ள மக்களின் அன்பு, அரவணைப்பு உள்ளிட்டவற்றை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர், வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இதையடுத்து, ஜாக்ஜங்கோஸ் மாமல்லபுரத்திலேயே நிரந்தரமாக தங்கி ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வெளிநாட்டு பயணிகளின் தேவைக்காக ஓட்டல் நடத்தி வந்தார். 

இவரது ஓட்டலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு பயணிகள் வரத்து குறைந்து ஓட்டலில் வியாபாரம் முடங்கியுள்ளது. இதனால், மன அழுத்த நோய்க்கு ஆளான இவர் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்று அலையின் அழகை பார்த்து ரசித்த ரொனால்டு ஜாக்ஜங்கோஸ், திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதைத்தொடர்ந்து, அவரது உடல் ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை பகுதியின் வடக்கு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலின் பின்புறம் கரை ஒதுங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி விரைந்து வந்த போலீசார் ஜாக்ஜங்கோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.