தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காட்டாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா. இவர் தூத்துக்குடி புறநகர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த 22-ம் தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது அந்தப் பேருந்து நிலை தடுமாறி அங்கும் இங்குமாகச் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ஓட்டுநரைப் பார்த்த போதுதான், அவர் மது போதையில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள், அரசுப் பேருந்தில் புகார் தெரிவிப்பதற்காக எழுதப்பட்டு இருந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு செல்போனில் தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் படி, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே பேருந்தை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் அவர்கள் ராமகிருஷ்ண ராஜாவை சோதனை செய்ததில் அவர் போதையில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் போலீஸாருக்கு சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் படி, அரசுப் பேருந்து ஓட்டுநர் ராமகிருஷ்ண ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.