மதுரை மேனேந்தல் மைதானத்தில் கடந்த 19ம் தேதி தொடங்கிய தமிழக முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சூரி நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் அமைச்சர் மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சூரி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை மிகப் பெரிய அரசியல் பயணத்தில் கடந்து வந்த பாதையில் சாதனைகளாக பதிவு செய்துள்ளனர். நாமெல்லாம் 14 வயதில் விளையாடிக் கொண்டிருப்போம். ஆனால், 14 வயதில் ஸ்டாலின் மாணவர் கட்சிக்கு பிரசாரம் செய்து 15 வயதில் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி 20 வயதில் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து தனது அரசியல் பயணத்தை கடந்து வந்துள்ளார்.
மிசாவில் அவரை சிறையில் அடைத்த பிறகு பல துன்புறுத்தல்களுக்கு ஆளாயிருக்கிறார். அதற்கு பின்பு சினிமா துறையிலும் கால் தடம் பதித்துள்ளார். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னை நிரூபித்து காட்டி அதன் பிறகு அரசியல் பயணத்தில் தொண்டர்களுடன் தொண்டராக பயணித்துள்ளார். 36 வயதில் சட்டமன்ற உறுப்பினராகி 43 வயதில் சென்னை மேயராக பொறுப்பேற்றார்.
சென்னையில் பல பூங்காக்கள், மேம்பாலங்கள் என பல வசதிகளை உருவாக்கி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தார். கலைஞரின் மகன் எனக்கூறி பதவியை தக்க வைத்து முதல்வராக உட்கார வில்லை கடைக்கோடி தொண்டர்களாக அடிமட்டத்திலிருந்து உழைத்து உழைத்து இந்த இடத்தில் முதல்வராகி இருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு படமாகவே எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.