சென்னை: Ponniyin Selvan 2 Trailer (பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்) – பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கமல் ஹாசனை நடிக்க எம்ஜிஆர் முடிவு செய்திருந்தாராம்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் காலங்கடந்து இன்றும் பலரால் வாசிக்கப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் அதில் அவரும் சம்பவங்களும், அதில் கல்கி செய்திருந்த விவரணைகளும் இன்னமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
திரைப்படமாக்கும் கனவு
பொன்னியின் செல்வன் நாவலை முதலில் எம்ஜிஆர் படமாக எடுக்க திட்டமிட்டார். ஆனால் அது கைகூடவில்லை. அதனையடுத்து கமல் ஹாசனும் அந்த முயற்சியில் இறங்கினார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இதனால் அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க வேண்டும் என அவ்வப்போது பேச்சுக்கள் எழுந்தது உண்டு.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்
ஒருவழியாக அந்தத் திட்டத்தை மணிரத்னம் கையில் எடுத்தார். அவருக்கு துணையாக லைகா நிறுவனமும் களத்தில் இறங்கியது. அதன்படி ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்தி,விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Ponniyin Selvan 2 Trailer
இதன் இரண்டாம் பாகமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் 2வுக்கு பன்மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், பாரதிராஜா, சிம்பு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கமல் ஹாசன் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரை வெளியிட்டார். ட்ரெய்லருக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

வந்தியத்தேவனாக கமல் ஹாசன்
விழாவில் கலந்துகொண்ட பாரதிராஜா பேசுகையில், “பொன்னியின் செல்வனை படமாக எடுக்க முயற்சித்தவர்களில் நானும் ஒருவன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பொன்னியின் செல்வனை படிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தப் படத்தை எம்ஜிஆர் படமாக எடுக்க விரும்பினார். என்னை இயக்குநராகவும், கமலை வந்தியத்தேவன் கதாபாத்திரத்திலும், ஸ்ரீதேவியை குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க சொன்னார்.

நல்ல வேளையாக நான் எடுக்கவில்லை
ஆனால் அந்த நேரத்தில் எம்ஜிஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன காரணமாக அது நடக்காமல் போனது. நல்ல வேளையாக நான் அந்தப் படத்தை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் நிச்சயம் சொதப்பியிருப்பேன் என்பதால்தான் கடவுள் இந்தப் படத்தை மணிரத்னத்தை எடுக்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக உள்ளது. இதை பார்ப்பதற்குத்தான் கல்கி உயிரோடு இல்லை” என்றார்.