பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதி உள்பட 4 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. இன்று குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதில், இந்தியாவுக்கு எதிரான சதிதிட்டங்களுக்கான நிதியை திரட்டுவதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி (ஜே.இ.ஐ.) என்ற அறக்கட்டளை நிறுவப்பட்டது.

இதன்பின், அந்த அமைப்பு 2019-ம் ஆண்டில் சட்டவிரோத அமைப்பு என அறிவிக்கப்பட்டது. எனினும், சந்தேகத்திற்குரிய வகையிலான அதன் செயல்பாடுகளை பற்றி தொடர்ந்து எங்களது அமைப்பு விசாரணை நடத்தியது. அதில், அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பும், நிதி திரட்டி வந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து, 2022-ம் ஆண்டு செப்டம்பரில் அதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், ஜே.இ.ஐ. அமைப்பு, அல் ஹூடா என்ற கல்வி அறக்கட்டளையை தோற்றுவித்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரிவினைவாத செயல்களுக்கு நிதி திரட்டும் குறிப்பிட்ட நோக்குடன் உருவான அந்த அமைப்பில் அன்றாட வேலையில் முகமது ஆமீர் ஷாம்ஷி ஈடுபட்டார்.

திரட்டிய நிதியை, மற்றொரு குற்றவாளியான ஜே.இ.ஐ. அமைப்பின் தலைவர் அப்துல் ஹமீது கனாய்க்கு வழங்கி உள்ளார். முஷ்டாக் அகமது மீர் என்பவருடன் சேர்ந்து சதி திட்டத்திலும் ஆமீர் ஈடுபட்டு உள்ளார்.

முஷ்டாக் ஹவாலா சேனல்கள் வழியே பாகிஸ்தானில் இருந்து ஆமீருக்கு நிதியை அனுப்பி வந்து உள்ளார் என என்.ஐ.ஏ. தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, அல் ஹூடா பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான முஷ்டாக் அகமது மீர் உள்பட 4 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.