வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: 5 மணி நேரத்தில் டெல்லி போயிடலாம்… ராஜஸ்தானுக்கு இதுதான் ஃபர்ஸ்ட்!

பிரதமர் மோடி கனவுத்திட்டம் என்று கருதப்படும் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் 14வது ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று (ஏப்ரல் 12) கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இது ராஜஸ்தான் மாநிலத்தில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மரில் இருந்து டெல்லி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. மொத்தமுள்ள 428 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 15 நிமிடங்களில் ரயில் கடந்து செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 86 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். நாளை முதல் அஜ்மர் டூ டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் வழக்கமான சேவை தொடங்கப்படும்.

அஜ்மர் டூ டெல்லி

இடையில் ஜெய்ப்பூர், ஆல்வார், குர்கான் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். தற்போது வரை அஜ்மரில் இருந்து டெல்லி வரை விரைவாக செல்லக்கூடிய ரயிலாக சதாப்தி எக்ஸ்பிரஸ் திகழ்ந்து வருகிறது. இது 6 மணி நேரம் 15 நிமிடங்களில் கடக்கும். இதனை முறியடிக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அமலுக்கு வந்துள்ளது.

ஒரு மணி நேரம் மிச்சம்

தற்போதைய பயண நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்கூட்டியே டெல்லிக்கு சென்றுவிடலாம். இந்த ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான புஷ்கர், அஜ்மர் ஷரிப் தர்கா உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் காணப்படும்.

செமி ஹைஸ்பீடு ரயில்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகளை பொறுத்தவரை OHE எனப்படும் மேல் வழித்தட எலக்ட்ரிக் ஒயருக்கு கீழ் இயங்கும் உலகின் முதல் செமி-ஹை ஸ்பீடு பயணிகள் ரயில். இதன் பெட்டிகள் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதற்கு சதாப்தி ரயில்களை காட்டிலும் 30 சதவீத குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது.

என்னென்ன வசதிகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனிப்பட்ட எஞ்சின்கள் இன்றி இயங்குகின்றன. மேலும் பயோ கழிவறைகள், தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளின் தகவல்களை சேகரிக்கும் அமைப்பு, வைஃபை, ஏசி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ரயிலின் மேற்புறம் பிரத்யேக ஆண்டி கிராபிட்டி வினைல் பூச்சு பூசப்பட்டுள்ளது.

இதன்மூலம் எளிதில் சுத்தப்படுத்த முடியும். பராமரிப்பதும் எளிது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் மொத்தம் 1,128 பயணிகளை ஏற்றி கொள்ள முடியும். இதில் ஏசி சேர் காரில் 1,072 இருக்கைகளும், எக்ஸிக்யூடிவ் பிரிவில் 56 இருக்கைகளும் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.