குட்கா முறைகேடு வழக்கு | கூடுதல் குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தகவல்

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் திருத்தப்பட்ட முழுமையான கூடுதல் குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை என நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு வருமானவரித் துறையினர் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் திடீர் சோதனை நடத்தியபோது தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான டைரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சர்ச்சையி்ல் தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், மத்திய அரசு அதிகாரிகள் பழனி, செந்தில்வேலவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரையும் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்தனர்.

இந்த வழக்கில் டெல்லி சிபிஐ அதிகாரிகள், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மாதவராவ் உள்ளி்ட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கி்ல் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கடந்த 2022, ஜூலை 19-ம் தேதி தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதையடுத்து இந்த 11 பேருக்கும் எதிராக டெல்லி சிபிஐ போலீஸார் கூடுதல் குற்றப்பத்திரிகையை கடந்தாண்டு நவம்பரில் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, தவறுகளைத் திருத்தி முழுமையான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் பிழை திருத்தம் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை என்றும், குட்கா முறைகேடு விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பான மத்திய அரசின் கடிதம் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தனது சொத்துகளை திருப்பி ஒப்படைக்கக் கோரி குடோன் உரிமையாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஏப்.24-க்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

குடோன் உரிமையாளர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஏப்.24-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.