சென்னை மெரினா கடற்கரை அருகில் கலங்கரை விளக்கம் பகுதியில் நொச்சிக்குப்பம் அமைந்துள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை என மக்களால் அறியப்படும் பகுதியில் கடலை ஒட்டியவாறே சாலைகள் உள்ளன. அச்சாலையில் இருபுறமும் நொச்சிக்குப்பம் பகுதி மக்கள் மீன் கடைகளை பல ஆண்டுகளாகவே வைத்துள்ளனர். அதோடு மீன் உணவகங்களும் ஆங்காங்கே இருக்கின்றன. பல வகையான மீன்கள் இரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் விருப்பத்துடன் வருவதுண்டு. மீன் வாங்கவும் ருசிக்கவும் மக்கள் அலைமோதிய அந்த சாலை தற்போது போராட்டக்களமாக உருமாறியுள்ளது.

விற்பனைக்குரிய மீன்களைச் சாலைகளில் வீசி தர்ணாவில் ஈடுபடுகின்றனர் நொச்சிக்குப்பம் பகுதி மக்கள். மீன் பிடிக்கச் செல்லவேண்டிய படகுகள் சாலைகளை மறித்து நின்று கொண்டிருந்தன. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்னை மாநகராட்சி, காவல்துறை மற்றும் நீதிபதிகளை எதிர்த்து உரக்க கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் நொச்சிக்குப்பம் பகுதி மக்கள். ஏன் இந்த போராட்டம்….என்ன காரணம்… ”மீன்கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளது ஒரு வாரத்திற்குள் அகற்றுங்கள்” என உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டதே காரணம்.
தாமாக முன்வந்த நீதிமன்றம்…
நொச்சிக்குப்பம் பகுதி மக்கள் கடற்கரையோரம் வைத்துள்ள மீன் கடைகள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டது என தாமாக முன்வந்து பொதுநல வழக்காகக் கருதி விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எஸ்.எஸ் சுந்தர், பி.பி பாலாஜி ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துங்கள் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். மீன்களை விற்கவும் சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்ததும் ஏன்? எனக் கேள்விகளை அடுக்கியுள்ளனர் நீதியரசர்கள்.

மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு இதுகுறித்து ஏப்ரல் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி தரப்பில் லூப் சாலையில் மீன் சந்தை சுமார் 9.97 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டட பணிகள் நிறைவு பெற்றதும் மீன் கடைகள் மாற்றப்படும் என தெரிவித்தற்கு நீதிபதிகள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையும் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள முன்கடைகளையும் மீன் உணவகங்களையும் அகற்றினர், கடந்த சில தினங்களாகவே மீன் விற்க அனுமதி மறுக்கப்படுகிறது.
கொந்தளித்த நொச்சிக்குப்பம் மக்கள்
நொச்சிகுப்பம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாகவள்ளியிடம் பேசினோம். “நாங்க நாலு ஐஞ்சு தலைமுறையா இங்க இருக்கோம், 40 வருஷத்துக்கு முன்னாடி இங்க ரோடே கிடையாது, ஓலை போட்டு வாழ்ந்துட்டு இருந்தோம். சின்ன வண்டி போகுற மாதிரி தார் ரோடு சின்னதா இருக்கும். ஆறு, எழு வருஷத்துக்கு முன்னாடி உங்க நலனுக்காக ரோடு போட்டு தரோம்னு சொல்லி, ரோட பெருசாக்கி ப்ளாட்பார்ம் போட்டு கொடுத்தாங்க, அதுல இருந்து கார்ப்பரேஷன் காரங்க பிரச்னை பண்றாங்க, இப்ப என்னடானா நீங்க இருக்க கூடாது.

சிங்கார சென்னையா மாத்த போறோம், இங்க நாத்தம் அடிக்குது, இந்த எரியாவுல நீங்க இருக்க கூடாதுனு சொல்றாங்க. நாங்க எங்க போறது. எங்க வாழ்வாதாரம் இதுதான். கடலுக்கு போய் பிடிச்சிட்டு வந்து காலம் காலமா மீன் விக்குறோம், இரண்டு பக்கமும் கடை போட கூடாதுனு சொல்றாங்க, அப்போ நாங்க எங்க போய் பொழைக்கறது… நாங்க எங்கயும் போறதா இல்ல, நாங்க இங்க தான் இருப்போம்” என்றார் ஆக்கிரோஷத்துடன்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்க கடைகள ஆக்கிரமிப்புனு சொல்றாங்க, நாங்க வாழ்ந்துட்டு வந்த இடம் இது, அங்க ரோட போட்டு ஆக்கிரமிச்சது நீங்க, இப்போ வந்து இது ஆக்கிரமிப்பு கடையெல்லாம் காலி பண்ணுனா என்னங்க நியாயம். சென்னைல எத்தனையோ கட்டடம் ஆக்கிரமிப்புல கட்டிருக்காங்க, அதெல்லாம் தெரியல உங்களுக்கு, ஓரமாக தார் பாய்ய வீருச்சி கடை போட்டது ஆக்கிரமிப்பா…

சரி உங்கல யார் இந்த ரோடுக்கு வரச் சொன்னது… இந்த ரோட்டுக்கு வராம நேரா கூட போகலாமே, இது ஒரு உள்புற ரோடு தானா…இந்த இடம் நாறுதுனு சொல்றீங்க தான… நேரா போகவேண்டியதுதான.. எதுக்கு நொச்சிக்குப்பம் உள்ள வரீங்க… இது எங்க ஊரு, இது எங்க கடை, நாங்க இங்க தான் இருப்போம்” என்கிறார் ஆக்ரோஷத்துடன்,
நம்முடன் பேசிய முகுந்தா என்பவர், “தீடிருனு வராங்க கார்பரேஷன்ல இருந்து, மீன வாரி போட்டு, வலைய காலால எட்டி உதைக்குறாங்க, எங்களுக்கு கடல் தெய்வம், அது கொடுக்குற பொருள் எங்களுக்கு தெய்வம். அதை எட்டி ஒதைக்குறாங்க, அதிகாரத்துல இருந்தா என்னவேணா பண்ணுவீங்களா.. எங்களோட கஷ்டத்த வெயில உக்காந்து பாருங்க தெரியும், நெருப்பு மாதிரி கொதிக்குற வெயில்ல வியாபாரம் செய்யுறோம், அது தான் எங்களுக்கு தெரியும், இப்போ மீன் கட போடக் கூடாதுனா சாப்பாட்டுக்கு என்ன பண்றது சொல்லுங்க” என ஆவேசமடைந்தார்

தொடர்ந்து பேசிய அவர் “ப்ரஷ் மீனு வேணுமனு சி.எம் வீட்டுக்கு, அமைச்சர் வீட்டுக்குனு அதிகாரத்துல இருக்குறவங்களுக்கு மீன் வாங்க இங்க தான வந்தாங்க… ப்ரஷ் மீனு தேவைப்படுது, வாழ்வாதாரத்துக்கு மீன் விக்கிற எங்க நலன் கண்ணுக்கு தெரியலயா… நாங்க உங்கட்ட எதாவது கேட்டோமா… ஏன் எங்க இடத்த கேக்குறீங்க… ஓட்டு வேணும்னு வர்றீங்களே, உங்களுக்கு இங்க கடை போட்டு தர்றோம்னு சொன்னீங்கள, இதுவரை எதாவது செஞ்சீங்களா, ஆட்சி இருக்குறவங்க வந்து அடிப்படை விஷயமாவது செஞ்சது உண்டா.. எதுமே இல்ல” என்றவர் “எங்க வாழ்வாதாறத்துல கைய வச்சா இங்கயே விஷம் குடிச்சுட்டு சாகத்தான் செய்யனும்” என கொதித்தார்
“மெரினாவை அழகு படுத்தபோறோம்னு கட்டுமரங்களை அங்கு நிறுத்தக்கூடாதுனு சொல்லிடாங்க, இப்போ நொச்சிகுப்பம் பகுதியில ஆக்கிரமிக்கிறோம்னு எங்க பொழப்புல மண் அள்ளி போட்றாங்க. இன்னையோட அஞ்சு நாள் ஆச்சு, கடை போட விடல, தினக்கூலி நாங்க, இப்படியே போச்சுனா பட்டினியா தான் கிடக்கனும்” என வருந்தினார் மூதாட்டி ஒருவர்.

போராட்டத்தில் பங்கேற்ற சீமான்
நொச்சிக்குப்பம் மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கடல் இருக்கிறது, கரையில் படகு வந்து இறங்குகிறது, அங்கே ஒரு குடை வச்சி மீன் விக்குறாங்க, இதில் என்ன பிரச்னை. கடற்கரையில மீன் விக்கக்கூடாது.. ஆனா பேனா சிலை வைக்கலாமா… கடற்கரை ஓரத்துல மீன் சந்தை போடக் கூடாது ஆனா சமாதி இருக்கலாமா… மக்களின் கடைகளை காலி செய்வதில் இவ்வளவு தீவிரம் காட்டுகிறீர்களே… நீதிமன்றம் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றிவிட்டீர்களா.. இவங்க இங்க மீன் விக்குறதுனாலா யாருக்கு என்ன இடையூறு வந்ததுனு சொல்லுங்க..என கொந்தளித்த சீமான். “மாண்புமிகு நீதியரசர்கள் தங்களின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும்படி அன்புடன் வேண்டுகிறேன்” என கோரிக்கையையும் முன்வைத்தார்.

”பல தலைமுறைகளாக மீன் கடை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர் நொச்சிக்குப்பம் மீனவர்கள், கடைகளை காலி செய்யச் சொல்லியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி கட்டவரும் சந்தையின் கட்டட பணி முடியவே 6 மாதம் ஆகிவிடும் என்கிறார்கள். அப்படியெனில் இவர்கள் எங்கே செல்வார்கள்… அதுவரை நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாராம் என்னவாகும்… தமிழ்நாடு அரசு முன்வந்து நொச்சிகுப்பம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.