மக்கள் மருந்தகத்துக்கு ஜி20 பிரதிநிதிகள் பாராட்டு: மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

கோவா: மக்கள் மருந்தகத்துக்கு ஜி20 பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்ததாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஜி20 அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஜி20 சுகாதார செயலாக்க கூட்டம் கோவா மாநிலம் பன்ஜிம் நகரில் நேற்று நடந்தது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்கு இடையே ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கோவாவில் செயல்படும் மக்கள் மருந்தகத்தை மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார்.

இதுகுறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘‘மக்கள் மருந்தகத்தில் விற்கப்படும் தரமான மற்றும் மலிவு விலை மருந்துகள் ஏழை மக்களுக்கு எவ்வாறு பயன் அளிக்கிறது என்பது குறித்து விளக்கினேன். இதை ஆர்வத்துடன் கேட்ட அவர்கள் இத்திட்டத்தை வெகுவாக பாராட்டினர். மேலும் இதுபோன்ற மலிவு விலை மருந்தக திட்டத்தை அவர்கள் தங்கள் நாட்டிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினர். யுனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவன அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளும் மக்கள் மருந்தகத்தை பார்வையிட்டனர்’’ என்றார்.

பிரதமரின் பாரதிய ஜன் அவுஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 764 மாவட்டங்களில் 9,082 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. இங்கு மருந்துகள் 50 முதல் 90% வரை குறைவான விலையில் விற்கப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.