சென்னை: Leo audio launch(லியோ இசை வெளியீட்டு விழா)லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து விஜய் சொன்ன தகவலை தயாரிப்பாளர் லலித்குமார் பகிர்ந்திருக்கிறார். அது விஜய்யின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களையுமே ஹிட் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதில் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமின்றி கேஜிஎஃப், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் என வேற்று மொழி படங்கள் தமிழ்நாட்டில் அதிகம் ஹிட்டான சூழலில் விக்ரமின் வெற்றி தமிழ் சினிமாவின் வெற்றியாகவே கருதப்பட்டது.
விஜய்யுடன் மீண்டும் இணைந்த லோகேஷ்: விஜய் கடைசியாக வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். பைலிங்குவலாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனையடுத்து தனது கேரியரில் மெகா ஹிட்டுகளில் ஒன்றான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார் விஜய். இவர்கள் இருவரும் இரண்டாவது முறை இணையும் படத்துக்கு லியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த லியோ ப்ரோமோ: விக்ரம் படம் போலவே இந்தப் படத்திற்கான டைட்டிலையும் ப்ரோமோவுடன் வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். காஷ்மீரில் சாக்லேட் ஃபேக்டரி வைத்திருக்கும் விஜய்யை தேடி ஒரு கும்பல் வருவதுபோல் அந்த ப்ரோமோவில் காட்சிகள் இருந்தன. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ஷூட்டிங் இப்போது சென்னையில்: இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றது படக்குழு. அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் அங்கு முகாமிட்டிருந்த படக்குழு கடந்த வாரத்தில்தான் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியது. இதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவந்தது. தற்போது பையனூரில் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.
ஆடியோ வெளியீட்டு விழா: இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது தெரியவந்திருக்கிறது. அதாவது படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரும், விஜய்யும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து கேட்டிருக்கின்றனர்.

அதற்கு விஜய், “நாம எப்போதும் நேரு ஸ்டேடியத்தில்தானே ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்திவருகிறோம். இந்த முறை தென் தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்களை சந்திக்க விரும்புகிறேன். எனவே அதற்கு தகுந்தபடி திட்டமிடுவோம்” என கூறினாராம். இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தக்ஷின் மாநாட்டில் தெரிவித்தார்.
எங்கு நடக்கிறது; என்ன திட்டம்?: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று ஊர்களில் ஏதேனும் ஒரு ஊரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு தனது மக்கள் இயக்கத்தினரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அறிவுறுத்தியிருந்தார் விஜய். அது அவரது அரசியல் நகர்வாகவே கருதப்பட்டது.
சூழல் இப்படி இருக்க எப்போதும் இல்லாத முறையில் இப்போது தென் தமிழ்நாட்டு பக்கம் விஜய்யின் கவனம் குவிய ஆரம்பித்திருக்கிறது. எனில், அரசியலுக்குள் நுழைய வேண்டுமென்றால் அனைத்து பகுதியையும் கவர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை தென் தமிழ்நாட்டு பக்கம் நடத்த திட்டமிட்டிருக்கிறாரா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் சிலர் எழுப்பிவருகின்றனர்.