2 மாத தனிமைப்படுத்தலுக்குப்பின்12 சிவிங்கிப்புலிகள் உயிரியல் பூங்காவில் விடப்பட்டன

ஷியோபூர்,

இந்தியாவில் ‘சீட்டா’ எனப்படும் சிவிங்கிப்புலிகளை மீண்டும் பெருக்கும் வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மத்திய அரசு அவற்றை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.

இவ்வாறு நமீபியாவில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேசத்தின் குணோ உயிரியல் பூங்காவில் விடப்பட்டன.

இதைப்போல தென்ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 12 சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்பட்டு இருந்தன. அவை குணோ உயிரியல் பூங்கா அருகே உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் கடந்த 2 மாதங்களாக பராமரிக்கப்பட்டு வந்தன.

இதைத்தொடர்ந்து இந்த சிவிங்கிப்புலிகளும் தற்போது உயிரியல் பூங்காவில் விடப்பட்டு உள்ளன. இதற்கான அனுமதியை மாநில கால்நடை பராமரிப்புத்துறை வழங்கியதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அந்த சிவிங்கிப்புலிகள் பூங்காவில் விடப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரி சவுகான் தெரிவித்தார்.

முன்னதாக நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகளில் ஒன்று சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.