சென்னை: Thangalaan (தங்கலான்) தங்கலான் படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் கனவு படம் என கூறப்பட்டு வந்த சூழலில் தற்போது அவரது புதிய திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர் பா.இரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் பெரிய அளவில் ஒலிக்காத தமிழ் சினிமாவில் இரஞ்சித் வந்த பிறகுதான் அந்தக் குரல் சத்தமாக கேட்க ஆரம்பித்தது. அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் சமூகத்தில் ஏதோவொரு உரையாடலை தொடங்கிவைக்கும். அந்த அளவுக்கு அவரது படத்தின் கருப்பொருள் அமைந்திருக்கும் என்பது அவரது தனிச்சிறப்பு.
தங்கலான் இரஞ்சித்: பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து அவர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.
தங்கலான் மேக்கிங்: சூழல் இப்படி இருக்க படத்தின் ஹீரோ சியான் விக்ரம் தனது 57ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அதனையொட்டி தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை பா.இரஞ்சித் வெளியிட்டார். அதனைப் பார்த்த ஒட்டுமொத்த தமிழ் திரையுலகும் ஆச்சரியத்தில் வாய் அடைத்து போயிருக்கிறது. அதை பார்த்த பலரும் நிச்சயம் இந்தப் படம் தமிழின் பெருமைமிகு படமாக இருக்கும் என ஆரூடம் கூறிவருகின்றனர்.
விக்ரமுக்கு கண்டிப்பாக ஹிட்: விக்ரம் சமீபகாலமகா ஹிட்டுக்கு திணறிக்கொண்டிருக்கிறார். சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்தாலும் அவர் நடிக்கும் படங்கள் தொடர் தோல்விகளையே சந்தித்துவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் அவர் பா.இரஞ்சித்துடன் இணைந்திருக்கிறார். அதுமட்டுமின்றி மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது படம் வேறு ரகத்தில் உருவாவது உறுதியாகிறது. எனவே இந்தப் படம் விக்ரமுக்கு மெகா ஹிட் படமாக அமையும் எனவும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தங்கலான் கதை என்ன?: கேஜிஎஃப் தங்க சுரங்கத்திற்கு அருகில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கைதான் தங்கலான் படத்தின் மையக்கரு எனவும் 1870ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தை தங்கலான் ரசிகர்களுக்கு நிச்சயம் காட்சிப்படுத்தும் என கூறப்படுகிறது. சார்பட்டா பரம்பரையில் 1980களை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்திய இரஞ்சித் 1870 முதல் 1940ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தையும் அச்சு அசலாக காட்சிப்படுத்தியிருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது.

கனவு படம்: கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கேஜிஎஃப் படம் இந்திய அளவில் ஹிட்டானது. ஆனால் கமர்ஷியலாக உருவான அந்தப் படத்தில் பல வரலாறுகள் மறைக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்துதான் இந்தக் கதைக்களத்தை பா.இரஞ்சித் கையில் எடுத்ததாகவும், இதை அவர் தனது கனவு படமாகவே நினைத்து எடுத்துவருவதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்கருக்கு அனுப்ப திட்டம்?: தங்கலான் இரஞ்சித்தின் கனவு படம் என்பது அதன் மேக்கிங் வீடியோவிலேயே தெரியும். அதுமட்டுமின்றி படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப பா,இரஞ்சித் விரும்புகிறார். அதனால்தான் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் பார்த்து பார்த்து செதுக்குகிறார். மேலும் படத்துக்கு சர்வதேச அளவில் கவனம் கிடைக்க வேண்டும் என்பதால்தான் புகழ் பெற்ற டேனியல் கால்டாகிரோனை படக்குழு கமிட் செய்திருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.