ஜஸ்ட் மிஸ்… திருப்பதி பக்தர்களுக்கு வந்த அலர்ட்… தேவஸ்தானம் பெயரில் மெகா மோசடி!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் இயங்கி வரும் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் வழக்கத்தை விட மக்களின் வருகை அதிகமாக உள்ளது. இதையொட்டி தேவஸ்தானம் சார்பில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பிருந்ததை போல, அலிபிரி வழியாக நடந்து வருபவர்களுக்கு காளி கோபுரத்தில் இலவச டோக்கன்கள் வழங்கும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு

பக்தர்கள் அதிகப்படியான வருகையை ஒட்டி 300 ரூபாய் தரிசன டிக்கெட், விஐபி தரிசனம், பரிந்துரை கடிதங்கள் வழியாக தரிசனம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அதாவது, online.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் தான் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாக செயல்பட்டு வருகிறது. இதில் பக்தர்களுக்கான பல்வேறு விதமான சேவைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

போலி இணையதளம்

மேலும் திருமலையில் இருந்து நேரலையில் ஒளிபரப்பப்படும் நிகழ்வுகளையும் கண்டு ரசிக்கலாம். ஆன்லைன் முன்பதிவு செய்து டிக்கெட்களையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையதளத்தின் முகவரியை சற்றே மாற்றம் செய்து போலியான இணையதளத்தை சிலர் செயல்படுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளன. அந்த இணையதளம் tirupatibalaji-ap-gov.org என்ற பெயரில் இயங்கி வருகிறது. பார்ப்பதற்கு உண்மையான இணையதளம் போன்றே தோற்றமளிக்கிறது.

TTD Fake Website

ஆன்லைன் டிக்கெட் சேவை

அதில் ஆன்லைன் டிக்கெட் சேவை முதல் பல்வேறு சேவைகள் இடம்பெற்றுள்ளன. இதனை நம்பி பணம் செலுத்தி டிக்கெட் வாங்க முயற்சித்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். பலரிடம் இருந்து பணம் பறிப்பதற்காக தான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விஷயம் தேவஸ்தானத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனே போலியான இணையதளத்தை முடக்க போலீசார் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தேவஸ்தானம் வேண்டுகோள்

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் என்னென்ன போலி இணையதளங்கள் இருக்கின்றன என சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது வரை 41 போலி இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை முடக்கவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி இணையதளங்களை நம்ப வேண்டாம் என்று பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விவரங்கள் தேவை

தனியார் ஏஜென்சிகளுக்கு விரைவு தரிசன டிக்கெட்களை விற்பனை செய்யும் அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக Godaddy நிறுவனத்திற்கு திருமலை டவுன் காவல் நிலையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட வெப்சைட் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, மொபைல் நம்பர், மெயில் ஐடி, பணம் எங்கு செல்கிறது, முகவரி விவரம், சிஸ்டம், ஐ.எம்.இ.ஐ நம்பர், ஐபி முகவரி, ஆப் டெவலப்பர், உரிமையாளர் தகவல்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.