இயக்குநர் லிங்குசாமி வழக்கில் அதிரடி உத்தரவு!!

காசோலை மோசடி வழக்கில் ரூ.20 லட்சம் டெபாசிட் செலுத்தி இயக்குநர் லிங்குசாமி ஒப்புக் கொண்டதால் அவரது சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் எண்ணி ஏழு நாள் என்ற படத்தை தயாரிப்பதற்காக, பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து 1.3 கோடி ரூபாயை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கடனாக பெற்றிருந்தனர்.

கடனுக்காக லிங்குசாமி கொடுத்த 1.35 லட்ச ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக்கோரியும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளான இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தபோது, காசோலை தொகையில் 20 சதவீதம் ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 20 சதவீத தொகையை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், லிங்குசாமிக்கு விதித்த ஆறு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.