செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? மா.சுப்பிரமணியன் காட்டம்!

செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் செய்ய முடியுமா என்று மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னமும் ஐசியுவில் உள்ளதாகவும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலி ஏற்படாமல் இருக்க செந்தில்பாலாஜிக்கு வலி நிவாரணி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செந்தில்பாலாஜி அறுவை சிகிச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த அவர், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் தீவிரம் அவர்களுக்கு தெரியக்கூடும். வெளிப்படைத்தன்மையுடன் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் செய்ய முடியுமா ?” என்று காட்டமாக பதில் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.