ஆண்மைக்குறைவு… தண்ணீரிலும் இருக்கலாம் ஆபத்து! காமத்துக்கு மரியாதை | S3 E 47

பாட்டிலில் அடைக்கப்பட்டு வருகிற தண்ணீரின் மீதும், கேன் வாட்டர் மீதும், ‘தண்ணி சுத்தமா இருக்கு’, ‘டேஸ்ட்டா இருக்கு’, ‘பிளாஸ்டிக்ல அடைக்கப்பட்டிருக்கிற தண்ணீ உடம்புக்கு நல்லதில்ல…’ என்று, இங்கு பலதரப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. பாலியல் மருத்துவர் காமராஜ், ‘இந்தத் தண்ணீரைத் தொடர்ந்து அருந்தி வந்தால், ஆண்மைக்குறைவும், குழந்தையின்மை பிரச்னையும் வரும்’ என்கிறார். அவரிடம் பேசினோம்…

`வீட்டுக் குழாய்களில் வருகிற நீரில் 3 அல்லது 4 நாள்களில் புழுக்கள் வர ஆரம்பித்து விடும். ஆனால், பாட்டிலில் வருகிற தண்ணீரை 3 மாதங்கள் அல்லது 6 மாதங்கள்வரை கெடாது என சொல்லி விற்பனை செய்கிறார்கள். இந்த நீர் கெடாமல் இருக்க, புழுக்கள் வராமல் இருக்க, சில பூச்சிக்கொல்லிகளைச் சேர்க்கிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லிகள், ஆண்மைக் குறைவையும், குழந்தையின்மையையும் ஏற்படுத்தும் என சில ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.

டாக்டர் காமராஜ்

தவிர, இந்த நீர் கெட்டுப்போகாமல் இருக்க பாஸ்பேட் போன்ற சில மினரல்களையும் சேர்க்கிறார்கள். இதனால் சிறுநீரகத்தில் கற்களும் வரலாம். என்றைக்காவது ஒருநாள் என்றால் பரவாயில்லை… தினம் தினம் இந்த நீரைத்தான் அருந்துகிறீர்கள் என்றால், கொஞ்சம் யோசித்துச் செயல்படுங்கள். கேன் வாட்டருக்கும் இதுவே பொருந்தும். ‘கேன் வாட்டரை காய்ச்சிக் குடிக்கலாமா டாக்டர்’ என்றால், நீரை கொதிக்க வைக்கையில் ஈ கோலை போன்ற கிருமிகள் வேண்டுமானால் அழியும்.

ஆனால், புழுக்கள் உருவாகாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் மருந்துகள் அப்படியேதான் இருக்கும். அதனால், காலங்காலமாக மருத்துவர்கள் சொல்லி வருகிற ‘காய்ச்சி ஆறவைத்த நீரைக் குடியுங்கள்’ என்பதே அனைவருக்கும் நல்லது. இந்தத் தண்ணீரில் ருசி வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால், ஆரோக்கியத்துக்கு நல்லது” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.