இப்படியுமா சாவு தேடி வரும்.. கனவில் கூட நினைக்க முடியாது.. சம்பந்தமே இல்லாமல் இறந்த மாணவி

திருவாரூர்: சாவு எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது.. இப்படியுமா நம்மை தேடி வரும் என்று கனவில் கூட நினைக்க முடியாது. அப்படியான ஒரு சம்பவம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நடந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் மோதியதால் மின்கம்பம் முறிந்து குளத்தில் விழுந்தது. அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன பகுதிகளின் விவசாயத்திற்காக கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அப்படித்தான்திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தில் விவசாய பணிகளில் டிராக்டரில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். டிராக்டர் டிரைவர் வேலையை முடித்துவிட்டு அந்த வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை டிராக்டர் இழந்ததுடன் அருகில் இருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மின்கம்பம் முறிந்து அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. இதன் காரணமாக குளத்தில் மின்சாரம் பாய்ந்தது. அந்த நேரத்தில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த குன்னூர் நத்தம் தெருவை சேர்ந்த அர்ஜுனன் மகள் பிரகதீஸ்வரி(வயது18) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன், ஆலிவலம் உதவி ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இருந்த பிரகதீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். மின்கம்பம் மீது மோதிய டிராக்டர் யாருடையது? அதை ஓட்டி வந்தது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்

உயிரிழந்த மாணவி பிரகதீஸ்வரி அண்மையில் தான் பிளஸ் 2 முடித்துவிட்டு மன்னார்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கிறார். விரைவில் கல்லூரி செல்வதற்கு தயாராகி வந்த நிலையில், குளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாவு எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது.. இப்படியுமா நம்மை தேடி வரும் என்று கனவில் கூட நினைக்க முடியாத சம்பவம் காரணமாக பிரகதீஸ்வரியின் குடும்பத்தினர் உடைந்து போய் உள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.