அஜித் பவார் பாலிடிக்ஸும், பாஜக ஆபரேஷனும்… நேற்று சிவசேனா, இன்று தேசியவாத காங்கிரஸ், நாளை…?

மகாராஷ்டிரா அரசியலுக்கு என்ன தான் ஆச்சு? என்று கேட்கும் அளவிற்கு இன்று ஒரு சம்பவம் நடந்து பழைய நினைவுகளை கிளறிவிட்டுள்ளது. ஒன்னா? இரண்டா? கடந்த 4 ஆண்டுகளில் 4 முறை பதவியேற்பு விழாவை அம்மாநில மக்கள் பார்த்துவிட்டனர். இதன் பின்னணியை சற்று திரும்பி பார்த்தால் எம்.எல்.ஏக்கள் அணி மாறியது மற்றும் அரசு கவிழ்ந்தது உள்ளிட்டவை காரணங்களாக முன்வந்து நிற்கின்றன. முதலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

மீண்டும் ஒரு ஷிண்டே

சரியாக சொல்ல வேண்டுமெனில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்களை பிரித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதில் லேட்டஸ்ட் வரவாக இணைந்திருப்பது அஜித் பவார் ஆடிய அரசியல் ஆட்டம். கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு ஷாக் கொடுத்து விட்டு தனது ஆதரவு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் உடன் ஏக்நாத் ஷிண்டே – தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கைகோர்த்துள்ளார்.

அஜித் பவாருக்கு ஜாக்பாட்

இதற்கு பரிசாக அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவியும், எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அஜித் பவார் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் அணி மாறுவது முதல்முறை அல்ல. 2019ஆம் ஆண்டே ஒரு சம்பவத்தை நிகழ்த்தினார். தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் 3 நாட்களில் காட்சிகள் மாறின.

தேசியவாத காங்கிரஸில் மோதல்

உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி அமைந்தது. அதிலும் அடித்து பிடித்து துணை முதலமைச்சர் பதவியை வாங்கிவிட்டார். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த சர்ச்சையால் மீண்டும் கோபப்பட்டு அணி மாறிவிட்டார். அதாவது, சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு கட்சியின் செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டது அஜித் பவாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவித்தன.

பாஜகவிற்கு சாதகமா?

இந்த கோபம் தான் இன்றைய தினம் வெடித்து சிதறியுள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு அரசியல் சடுகுடு ஆட்டத்திலும் பாஜகவின் ஆபரேஷன் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விரைவில் 2024 மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் ஆளும் அரசிற்கு பெருகியுள்ள ஆதரவு அலை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது பாஜகவிற்கு சாதகமாக இருப்பதாக ஒருதரப்பினர் கூறினாலும், மக்கள் எழுதும் தீர்ப்பே இறுதியானது.

அடுத்த கட்சி எது?

உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ப்பையும், அஜித் பவார் கட்சியை உடைத்ததையும் மகாராஷ்டிரா மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? அதற்கு தேர்தலில் எப்படி பதிலளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நேற்று சிவசேனா, இன்று தேசியவாத காங்கிரஸ், நாளை எந்த அரசியல் கட்சியை பாஜக கவிழ்க்க போகிறது? என்ற மில்லியன் டாலர் கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.