9 கோடி மோசடி : சுதீப் மீது கன்னட தயாரிப்பாளர் புகார்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். ‛நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி' போன்ற படங்களின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். 'விக்ராந்த் ரோணா' என்ற பான் இந்தியா படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் கன்னட தயாரிப்பாளர் எம்.என்.குமார் என்பவர் சுதீப் மீது கன்னட சினிமா வர்த்தக சபையில் 9 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் குமார் கூறியிருப்பதாவது : சுதீப் நடிப்பில் புதிய படம் தயாரிக்க முடிவு செய்து 8 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு பேசிய முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன். சுமார் ரூ.9 கோடி வரை கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அவர் எனது படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்கவில்லை. என்னை கைவிட்டு விட்டார்.

ஏற்கனவே அவரிடம் பேசியபோதெல்லாம் எனது படத்தில் நடிப்பதாக தெரிவித்தார். இப்போது அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவருடையை வீட்டுக்கு சென்றால் சுதீப் வீட்டில் இல்லை என்று சொல்கிறார்கள். செல்போன் நம்பரையும் மாற்றி விட்டார். இரு தினங்களுக்குள் எனக்கு முடிவு தெரியவில்லை என்றால் சுதீப் வீட்டின் முன்னால் முற்றுகை போராட்டம் நடத்துவேன்'' என்றார்.

சுதீப் மீதான இந்த திடீர் புகார் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.