வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய துணை துாதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு எம்.பி.,க்கள், இதற்கு காரணமான காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், நம் நாட்டின் துணை துாதரகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, கடந்த 2ம் தேதி வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், துாதரகத்திற்கு தீ வைத்தனர்.
பின், இது குறித்த வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
பேச்சு சுதந்திரம்
வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த மாதம், காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே துாதரகத்திற்கு தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நம் நாட்டின் துணை துாதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அமெரிக்க எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. அதற்காக, பொதுச் சொத்துகளை அழிக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அனுமதி கிடையாது.
![]() |
சமூக வலைதளம்
இந்திய துணை துாதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பொறுத்துக் கொள்ள முடியாது.
இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்து உட்பட இந்திய துாதரக அதிகாரிகளை குறிவைத்து வன்முறை வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துக்களையும் கடுமையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்