விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஒரு காலத்தில் கிரிக்கெட் களத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். களமிறங்கினாலே அரைசதம் அல்லது சதத்தோடு தான் இருவரும் பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களுடன் ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோரும் போட்டியில் இருந்ததால், 4 பேரையும் உலக கிரிக்கெட்டில் டாப் 4 அல்லது பேப்பியூலஸ் 4 என அழைத்து வந்தனர். 4 பேருக்குமான ரன்களையும், சராசரி மற்றும் சதங்களை ஒப்பிட்டு வந்தனர். ஆனால் விராட் கோலிக்கும், வார்னருக்கும் இடையில் ஃபார்ம் அவுட்டானது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பெரியளவில் இந்த ரன்களையும் குவிக்கவில்லை. விராட் கோலி பேட்டிங்கில் இருந்து 2.5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த சதமும் வரவில்லை.
இதன் விளைவால், ஐசிசி டாப் 10 பட்டியலில் இருந்தும் விராட் கோலி வெளியேற்றப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளில் ஒரேயொரு சதம் மட்டுமே விளாசியுள்ள விராட் கோலியின் பேட்டிங் சராசரி 26.5ஆக உள்ளது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ஃபேப் 4 என்று இப்போது சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சதங்களாக விளாசி வருகிறார்கள். ஆனால் விராட் கோலி 4 ஆண்டுகளாக சும்மாதான் பேட்டிங் செய்து வருகிறார். விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் மோசமான பேட்டிங்கையே தொடர்ந்து வருகிறார்கள்.
அதனால் ஃபேப் 4 என்று சொல்வதற்கு பதிலாக ஃபேப் 3 என்று ரசிகர்கள் சொல்லலாம். இல்லையென்றால் ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள் என்ற பட்டியலில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு பாபர் அசாமை சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார்.
அதேபோல் விராட் கோலி இன்னும் சில டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் பார்முக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் டேவிட் வார்னர் நிச்சயம் பார்முக்கு வர வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டேவிட் வார்னர் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.